உள்ளூர் செய்திகள்

கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலை. 

சாலை ஓரத்தில் பொருட்கள் விற்பதால் கடும் போக்குவரத்து நெரிசலில் பழைய கலெக்டர் அலுவலக சாலை பொதுமக்கள் கடும் அவதி

Published On 2022-12-11 07:34 GMT   |   Update On 2022-12-11 07:34 GMT
பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானம், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தற்காலிக உழவர் சந்தை போன்றவற்றை இருந்து வருகின்றது.

இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களும் மற்றும் மாணவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் தற்போது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக மஞ்சக்குப்பம் மைதானத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மஞ்சகுப்பம் மைதானத்தின் ஒரு பகுதியில் கூரை கொட்டகை அமைத்து உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு உள்ள சிறு வியாபாரிகள் சாலையின் ஓரமாக காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லக்கூடிய மக்களும் வாகனங்களில் செல்லக்கூடிய மக்களும் சாலையில் நின்று கொண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வாங்கி செல்கின்றனர்.

இதன் காரணமாக இவ்வழியாக வந்து செல்லக்கூடிய பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகளும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் போது அங்குள்ள போக்குவரத்து போலீசார் உடனடியாக நேரில் வந்து போக்குவரத்தை சரி செய்து அங்குள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை எச்சரிக்கை செய்து செல்கின்றனர்.

ஆனால் தினந்தோறும் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதற்கு யார்? நிரந்தரமாக நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது சாலை ஓரத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு உள்ளே கொண்டு சென்று விற்பனை செய்தால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டும் இன்றி சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் முன்னேறுவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அனைவரும் இருந்தாலும் இது போன்ற போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சமயத்தில் போலீசார் மற்றும் அதிகாரிகள் இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News