உள்ளூர் செய்திகள்

கவிழ்ந்து கிடக்கும் ஆட்டோ.

முக்கூடல் அருகே நள்ளிரவில் விபத்து ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி - டிரைவருக்கு தீவிர சிகிச்சை

Published On 2022-08-30 09:33 GMT   |   Update On 2022-08-30 09:33 GMT
  • முக்கூடல் அருகே உள்ள இடைகால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் மருதுபாண்டி(வயது 25).
  • ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சிறிய பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள இடைகால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் மருதுபாண்டி(வயது 25). இவர் வீரவநல்லூரில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

இவரது கடையில் இடைகாலை சேர்ந்த கரிகாலன் என்பவரது மகன் பிரமுத்து(16) வேலை பார்த்து வந்தார். நேற்று நள்ளிரவில் 2 பேரும் ஒர்க்‌ஷாப்பில் வேலையை முடித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டி ருந்தனர்.

ஆட்டோவை மருதுபாண்டி ஓட்டி சென்றார். முக்கூடலை அடுத்த பாப்பாக்குடி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சிறிய பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் நொறுங்கியது. இதில் ஆட்டோவில் இருந்த பிரமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மருதுபாண்டி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார்.

தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதுபாண்டியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிரமுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News