கோவையில் தூக்குபோட்டு சிறுவன் தற்கொலை
- சிகரெட் பழக்கம் இருந்ததால் இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
- தவ்சிக் மவுலிஸ் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
கோவை:
கோவை சவுரிபாளையம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவரது மகன் தவ்சிக் மவுலிஸ் (13). குட்கா, சிகரெட் பழக்கமுடைய இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் சவுரிபாளையம் அருகே நின்று கொண்டு சிகரெட் பிடித்துள்ளார்.
இதை அந்த வழியாக ஆட்டோவில் வந்த அவரது தந்தை சதீஷ்குமார் பார்த்துள்ளார். மகன் சிகரெட் பிடிப்பதை பார்த்து வேதனையடைந்த அவர் தவ்சிக் மவுலிசை திட்டி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவில் சதீஷ்குமார் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த சதீஷ்குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மகன் தவ்சிக் மவுலிஸ் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுத அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிறுவன் தவ்சிக் மவுலிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.