கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம் சார்பில் ரத்ததான முகாம்
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- முகாமினை கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நெல்லை:
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் கிராம உதயம் பொது மேலாளர், அறங்காவலர் தமிழரசியின் 5-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோபால சமுத்திரம் கிராம உதயம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மற்றும் பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ஏழை எளிய நலிவுற்ற மக்களுக்கு இலவசமாக ரத்த தானம் வழங்கும் முகாம் இன்று கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் மேல ஆழ்வார் தோப்பு நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் தலைமை அலுவலக நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.
அம்பாசமுத்திரம் ரத்த வங்கி அலுவலர் ராஜேஷ்வரி, பத்தமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷைலா ஆகியோர் ரத்த தானம் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பேசினர். கிராம உதயம் தனி அலுவலர் ராமச்சந்திரன் சுகாதார மேற்பார்வை யாளர் பூங்கொடி சுகாதார ஆய்வாளர் அக்பர் அலி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். முகாமில் 86 பேர் ரத்ததானம் செய்தனர்.