கோத்தகிரி அருகே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
- விவசாயிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
- 15 பயனாளிகளுக்கு, ஒருவருக்கும் தலா 10 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன.
அரவேணு,
தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் மற்றும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் ஆகியவை சார்பில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கரிக்கையூர் கிராமத்தில் உள்ள பழங்குடியின விவசாயிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய காதி மற்றும் கிராம தொழில்கள் அமைச்சகத்தின் இயக்குநர் மனோஜ் குமார் தலைமை வகித்தார். நீலகிரி பாதுகாப்பு சங்கத்தின் கள இயக்குநர் சிங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். டெல்லியை சேர்ந்த காதி ஆணைய உதவி இயக்குனர் நிதேஷ் குமார், தமிழ்நாடு மாநில இயக்குநர் சுரேஷ், பெங்களூரை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பாண்டே ஆகியோர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள 15 பயனாளிகளுக்கு, ஒருவருக்கும் தலா 10 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வீதம் 150 பெட்டிகள், தேன் எடுக்கும் கருவி, பாதுகாப்பு உபகரணங்கள், முகமுடி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில் கிராம மக்களுக்கு ஊட்டச் சத்து உணவு தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் உள்பட பழங்குடியின மக்கள் பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் சென்னை காதி ஆணைய உதவி இயக்குனர் வசிராஜன் நன்றி கூறினார்.