உள்ளூர் செய்திகள்

குடிநீர் ஆதாரங்களின் தரத்தை பரிசோதனை செய்வது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்

Published On 2023-06-23 14:53 IST   |   Update On 2023-06-23 14:53:00 IST
  • மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள 333 ஊராட்சிகளிலும் தலா 5 பேர் வீதம் மொத்தம் 1,665 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  • இதன்மூலம் இப்போது பயிற்சி பெறும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சிகளில் இருக்கும் மற்ற சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சுய உதவிக்குழுக்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு களநீர் பெட்டியைப் பயன்படுத்தி குடிநீர் ஆதாரங்களின் தரத்தை பரிசோதனை செய்வது குறித்து விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

நேற்று முதல் மூன்று நாட்களுக்கு 30 ஊராட்சி களில் இருந்து 5 உறுப்பினர் வீதம் 150 பேருக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தாமரை மகளிர் கூட்டமைப்பு சுயஉதவிக்குழு நிறுவனம், சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு, களநீர் பரிசோதனை பெட்டியைப் பயன்படுத்தி குடிநீர் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமை நடத்தியது.

இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டு, களநீர் பரிசோதனை பெட்டியின் மூலம், புளோரைடு, மொத்த உப்பு, தண்ணீரில் உள்ள மாசு, தண்ணீரின் அடர்த்தி உள்ளிட்ட 13 பரிசோதனைகளை செய்து காண்பித்தனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் கூறுகையில், இதே போன்று மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள 333 ஊராட்சிகளிலும் தலா 5 பேர் வீதம் மொத்தம் 1,665 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் இப்போது பயிற்சி பெறும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சிகளில் இருக்கும் மற்ற சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர் என்றார்.

இந்த பயிற்சியை மகளிர் கூட்டமைப்பைச் சேர்ந்த திவ்யா மற்றும் நீர் பகுப்பாய்வாளர்கள் கண்ணையன், மாதப்பன், சேகர், பவித்ரா, சத்யா ஆகியோர் வழங்கினர். இதில், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லோகநாதன், உதவி நிர்வாக பொறியாளர் ரகோத்சிங், இளநிலை பொறியாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News