கடலூர் அருகே த.வா.க பேனரை கிழித்த நிர்வாகி மீது தாக்குதல்: பா.ம.க.வினர் 2 பேர் கைது
- கடலூர் அருகே த.வா.க பேனரை கிழித்த நிர்வாகி மீது தாக்குதல் காரணமாக பா.ம.க.வினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய தலைவர் சுந்தர் என்பவரை வழிமறித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது
கடலூர்:
கடலூர் முதுநகர் அருகே கண்ணாரப்பேட்டையில் சில நாட்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில நிர்வாக குழு தலைவர் கண்ணன் கட்சிக்கொடி ஏற்றினார். இதனை யொட்டி அப்பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம கும்பல் கத்தியால் கிழித்து சேதப்படுத்தினர். மேலும் அவ்வழியாக வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய தலைவர் சுந்தர் என்பவரை வழிமறித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் பாமகவை சேர்ந்த ராஜேஷ் (வயது 21), கீர்த்தி வாசன் (வயது 21), வெங்கடேசன், தனுஷ், சதீஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ராஜேஷ் மற்றும் கீர்த்திவாசன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.