உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே: நள்ளிரவில் தாய் - மகளை தாக்கி நகை பறிப்பு

Published On 2022-07-04 08:59 GMT   |   Update On 2022-07-04 08:59 GMT
  • திட்டக்குடி அருகே: நள்ளிரவில் தாய் - மகளை தாக்கி நகை மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது.
  • சுதாரித்துக் கொண்ட திருடர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையில் கிழித்து விட்டு வலது காலில் கட்டையால் பலமாக தாக்கினர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வடகரை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி(வயது43). இவர்களது மகள் பவானி(24) மற்றும் 9 மாத குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப் போது இரவு சேகர் மட்டும் வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று விட்டார். இந்நிலையில் இரவு சுமார் ஒரு மணி அளவில் மூன்று மர்ம நபர்கள் வீட்டில் பின்பக்க கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்றனர். அப்போது தூக்கத்தில் இருந்த பவானி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி செயினை பறித்தனர். இதனால் பவானியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த பரமேஸ்வரி முழித்துக் கொண்டு அருகில் கிடந்த அருவாமனையை எடுத்து திருடர்களை வெட்ட முயன்றார்.

சுதாரித்துக் கொண்ட திருடர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையில் கிழித்து விட்டு வலது காலில் கட்டையால் பலமாக தாக்கினர். தொடர்ந்து பவானியின் முகத்தில் செங்கலால் தாக்கினர். இவர்களின் சத்தத்தால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஓடி வந்து மர்ம நபர்களை துரத்தி பிடிக்க முயற்சித்தனர் அப்போது திருடர்கள் அணிந்திருந்த செருப்பை விட்டு விட்டு அருகில் உள்ள கரும்பு வயலில் குதித்து தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் போலீஸ் டி.எஸ்.பி. அங்கித்ஜெயின் மற்றும் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருட வந்த மர்ம நபர்கள் கால் சட்டை மற்றும் டீ-ஷர்ட் அணிந்தும் முகத்தில் முகமூடி அணிந்தும் திருட வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் யாரேனும் வந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்

Tags:    

Similar News