உள்ளூர் செய்திகள்

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு

Published On 2022-12-17 09:41 GMT   |   Update On 2022-12-17 09:41 GMT
  • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
  • நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.

அரியலூர்:

தேசிய அளவில் நுகர்வோர் வழக்குகளை தீர்க்க சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள், நுகர்வோர் ஆணையங்களில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் விசாரிக்கப்பட்ட 2 புகார்களில், விற்கப்பட்ட பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனையாளர்கள் வசூலித்து உள்ளது தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் கூடுதலாக பெறப்பட்ட தொகை மற்றும் இழப்பீடாக ரூ.1 லட்சம் தருவதற்கு மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

மற்றொரு வழக்கில் உற்பத்தி குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த கடைக்காரர் அதனை மாற்றி புதிய செல்போனை வழங்க மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு தீர்வு ஏற்பட்டது. சூரிய மின்சக்தி உபகரணத்தின் குறைபாடு ஏற்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அதனை வழங்கிய நிறுவனத்தினர் உபகரணத்தின் குறைபாடுள்ள பகுதிகளை மாற்றி இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக ஒப்புக்கொண்டனர்.

மேலும் வீடு தீப்பற்றியதால் ஏற்பட்ட இழப்புகளுக்கு கொடுக்க வேண்டிய காப்பீட்டுத்தொகையை கொடுக்கவில்லை என்று காப்பீட்டு நிறுவனம் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், உயரதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று இரண்டு வார காலத்திற்குள் ரூ.5 லட்சத்தை புகார்தாரருக்கு வழங்க காப்பீட்டு நிறுவன மேலாளர், மக்கள் நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளார்.

மேலும் சேவை குறைபாடு, கூடுதல் தொகை பெற்றது, நியாயமற்ற வணிக நடைமுறை, உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் குறைபாடு தொடர்புடைய 55 நுகர்வோர் புகார்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்ற அமர்வில் உறுப்பினராக வீரம் லாவண்யா பங்கேற்றார். இதில் அரசு வக்கீல் கதிரவன் உள்ளிட்ட வக்கீல்களும், புகார்தாரர்களும், எதிர் தரப்பினரும் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News