அடகு வைத்தவருக்கு நகைகளுக்குரிய பணம், இழப்பீடு தொகை வழங்க உத்தரவு
- அடகு வைத்தவருக்கு நகைகளுக்குரிய பணம், இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டனர்.
- அறிவிப்பின்றி 240 கிராம் தங்க நகைகள் ஏலம்:
அரியலூர்:
அறிவிப்பின்றி ஏலம் விடப்பட்ட 240 கிராம் தங்க நகைளுக்கு உரிய பணம் மற்றும் ரூ.1 லட்சம் இழப்பீடு தொகை நகை அடகு வைத்தவருக்கு வழங்க வேண்டும் என்று தனியார் நிதி நிறுவனத்துக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
அரியலூர் அரசு நகர், அரசு மருத்துவமனை அருகில் வசிப்பவர் செல்வராஜ்(வயது 68). அரசு சிமென்ட் ஆலையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவரான இவர், தனக்கு சொந்தமான 240 கிராம் தங்க நகைகளை அரியலூரில் இயங்கி வரும் இந்திய இன்போ லைன் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.4,76,000 கடன் பெற்றிருந்தார்.
இந்நிலையில், வட்டியுடன் அசல் தொகையை செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிடில் நகை ஏலம் விடப்படும் என்று செல்வராஜூக்கு அந்த நிதி நிறுவனம் அறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால் ஏலம் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு முறையான அறிவிப்பு அனுப்பாமல், மும்பை பதிப்பில் வெளியாகும் ஒரு செய்திநாளிதழில்ல ஏலம் விளம்பரம் செய்யப்பட்டு, அவரது நகைகள் ஏலத்தில் விடப்பட்டன.
இந்நிலையில், நமது நகைகள் ஏலம் விடப்பட்டதை அறிந்த செல்வராஜ், அந்த நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, எந்த தேதியில், எவ்வளவு தொகைக்கு ஏலம் விடப்பட்டது, யாரால் எடுக்கப்பட்டது போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அந்த நிதி நிறுவனம் விவரங்கள் எதையும் அளிக்கவில்லை.
இதையடுத்து செல்வராஜ், தமது நகைகளை திரும்பத் தருமாறும், சேவைக் குறைப்பாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.
இருதரப்பிலும் சாட்சியங்களும் ஆவணங்களையும் பரிசீலித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.
நகையை அடமானம் வைத்து கடன் பெற்றவருக்கு முறையாக அறிவிப்பு அனுப்பாமல் ஏலம் விட்டது சேவை குறைபாடு.
அவர் அடமானம் வைத்த 240 கிராம் தங்க நகைக்கு இன்றைய சந்தை மதிப்பு தொகையை நிதி நிறுவனம் திரும்ப வழங்க வேண்டும். அந்த பணத்தில் இருந்து நிறுவனத்துக்கு வர வேண்டிய கடன் மற்றும் சாதாரண வட்டியை கழித்துக் கொள்ள வேண்டும். சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.