உள்ளூர் செய்திகள்

முதுமலையில் சுற்றுலாபயணிகள் சென்ற வாகனத்தை துரத்திய யானை

Published On 2022-09-10 09:38 GMT   |   Update On 2022-09-10 09:38 GMT
  • ஓணம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது.
  • வாகனத்தை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி:

முதுமலையில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தை, புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கோடை காலத்தில் கடும் வறட்சி நிலவியதால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் பசுந்தீவனத்தை தேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றது. இதன் காரணமாக இரை கிடைக்காமல் புலிகள் நடமாட்டம் சாலையோரம் அதிகமாக காணப்பட்டது

இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனத்தில் பசுந்தீவனம் போதிய அளவு வளர்ந்துள்ளது. இதனால் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

தற்போது ஓணம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது. முதுமலை சாலைகளில் வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகின்றன.தொடர்ந்து வனவிலங்கு களுக்கு சுற்றுலா பயணிகள் இடையூறு செய்வதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் மற்றும் தொரப்பள்ளியில் இருந்து கார்குடி செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்தியது.

பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போ து, வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்தல் கூடாது. உணவு சமைத்தல் மற்றும் சாப்பிட கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News