கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை படத்தில் காணலாம்.
அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை அலுவலகத்தை நெல்லையில் அமைக்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் மனு
- பல் பிடுங்கிய விவகாரத்தை விசாரணை நடத்த தமிழக அரசு அமுதா ஐ.ஏ.எஸ்.-ஐ நியமனம் செய்துள்ளது
- போலீசார் எங்களை மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பல் பிடுங்கிய விவகாரம்
இதில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
அம்பை பல் பிடுங்கிய விவகாரத்தில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமுதா ஐ.ஏ.எஸ்.
இதற்கிடையே இதுதொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு அமுதா ஐ.ஏ.எஸ்.-ஐ நியமனம் செய்துள்ளது. இதனை வரவேற்கிறோம். ஆனால் இந்த விசாரணை அம்பையில் நடைபெற்று வருகிறது. அதனை மாற்றி நெல்லையில் அலுவலகம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு இருப்பதாக உணர்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களில் 3 பேரை மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், மேலப்பாளையம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறோம். நாங்கள் புதிய பஸ் நிலையம் பகுதியில் பயணிகளிடம் தானமாக பணம் வசூலித்து வாழ்வா தாரம் நடத்தி வருகிறோம். ஆனால் போலீசார் எங்களை மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர் என கூறியிருந்தனர்.