உள்ளூர் செய்திகள்

போத்தனூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை- வாலிபர் கைது

Published On 2023-11-04 14:45 IST   |   Update On 2023-11-04 14:45:00 IST
  • சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா காட்டி கொடுத்தது
  • போத்தலூர் போலீசார் விசாரணை

கோவை.

கோவை போத்தனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாணிக்கம் என்பவர் பூசாரியாக உள்ளார்.

இவர் வழக்கம் போல் கோவிலுக்கு வந்து பூஜை களை முடித்து விட்டு இரவில் கோவில் நடையை அடைத்து சென்றார்.

மறுநாள் காலை கோவிலை திறக்க வந்த போது, கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து, கோவில் தலைவரான சீத்தாராமன் என்பவருக்கு தகவல் கொடுத்தார்.

அவர் விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்து ரூ.5 ஆயிரம் பணம் திருடு போய் இருந்தது.

இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் வாலிபர் ஒருவர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைவதும், பின்னர் கோவிலில் இருந்து வெளியில் வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதை வைத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது, அதே பகுதியை சேர்ந்த யாசர் முசாபட்(28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News