கோவையில் நிதி நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் மோசடி செய்த இளம்பெண்
- குழந்தையின் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி மோசடி.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது32).
இவர் போத்தனூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். எனது நிறுவனத்தில் ஜனா என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் அவரது 22 பவுன் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அந்த நகையை மீட்க ரூ.43 ஆயிரம் பணம் தேவைப்படுவதாகவும், நகையை மீட்டதும் உங்களது நிறுவனத்திலேயே அந்த நகையை விற்பனை செய்வதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஜனாவை மீண்டும் தொடர்பு கொண்ட அந்தப் பெண் தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பணம் அவசரமாக தேவைப்படுகிறது என கூறி பணம் கேட்டார். இதனை உண்மை என நம்பிய ஜனா பணத்துடன் பெண் அழைத்த வங்கிக்கு சென்றார். அப்போது அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொண்ட பெண் பணத்துடன் அங்கிருந்து மாயமாகிவிட்டார்.
எனவே அந்தப் பெண்ணை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.43 ஆயிரம் பணத்துடன் மாயமான அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.