உள்ளூர் செய்திகள்

காரைக்கால் நெடுங்காட்டில் எலிபேஸ்ட் சாப்பிட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு

Published On 2023-08-16 14:44 IST   |   Update On 2023-08-16 14:44:00 IST
  • துர்கா வாந்தி எடுத்துள்ளார். அதை பார்த்த சரவணன் என்ன காரணம் என துர்காவிடம் கேட்டுள்ளார்.
  • தன்னை பிரிந்த ஏக்கத்தில் மனைவி எலிபேஸ்ட் சாப்பிட்டு இறந்திருக்கலாம்

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நெடுங்காடு பருத்திக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா (வயது 34). வீட்டில் இருந்து வருகிறார். சரவணனுடன் வேலை செய்யும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற சரவணன், கடந்த 20 நாட்களாக அவருடன் தங்கிவிட்டார். கடந்த 11-ந் தேதி சரவணன் வீட்டிற்கு வந்தார். மறுநாள் 12ந் தேதி காலை சரவணனின் மனைவி துர்கா வாந்தி எடுத்துள்ளார். அதை பார்த்த சரவணன் என்ன காரணம் என துர்காவிடம் கேட்டுள்ளார். நீங்கள் ஊரில் இல்லாத நேரத்தில் சரியாக சாப்பிடவில்லை. அதனால் வாந்தி வந்துள்ளது என துர்கா கூறியதாக தெரிகிறது.

மேலும், சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சரவணன் அழைத்தபோது, துர்கா செல்ல மறுத்துள்ளார். மறுநாள் 14-ந்தேதி துர்காவிற்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் நெடுங்காடு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு துர்காவை பரிசோதித்த டாக்டர்கள், துர்கா எலி பேஸ்ட் சாப்பிட்டதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தபோதும், துர்கா பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் தன்னை பிரிந்த ஏக்கத்தில் மனைவி எலிபேஸ்ட் சாப்பிட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் நெடுங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News