உள்ளூர் செய்திகள் (District)

வெள்ளலூர் குப்பை கிடங்கில் எந்திரத்தில் சிக்கி 2 கால்களையும் இழந்த தொழிலாளி

Published On 2023-09-28 09:29 GMT   |   Update On 2023-09-28 09:29 GMT
  • தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்
  • போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை வெள்ளலூரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பையை தரம் பிரித்து உரமாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (வயது23) வேலை செய்து வருகிறார். இவர் இன்று காலை குப்பைகளை நசுக்கும் எந்திரத்துக்குள் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மற்றொரு பணியாளர், சத்யா உள்ளே இருப்பதை கவனிக்காமல் எந்திரத்தின் சுவிட்ச்சை ஆன் செய்ததார். கண் இமைக்கும் நேரத்தில் சத்யாவின் இரண்டு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி நசுங்கியது.

இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனைக் கேட்டவர்கள் உடனடியாக எந்திரத்தை அணைத்தனர். இதில் அவரது இரண்டு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி தொடை வரை நசுங்கி சிதைந்தது.

உடனடியாக அவர்கள் இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் உயிருக்கு போ ராடிய சத்யாவை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News