உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் பணம் பறிக்க முயன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2023-01-21 09:24 GMT   |   Update On 2023-01-21 09:24 GMT
  • பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
  • குண்டர் சட்டத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் வெள்ளிக்குப்பம்பா ளையம் பகுதியில் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

இக்கடையின் சூப்பர்வைசராக ஊட்டியை சேர்ந்த விஜய்ஆனந்த் (41) பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்ஆனந்த் கடந்த நவம்பர் மாதம் கடையில் விற்பனை செய்யப்பட்ட ரூ.10 லட்சத்தை எடுத்து கொண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்ய சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் அவரிடம் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிறுமுகை போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் ஆகாஷ்(19) மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி பத்ரிநாராயணன் மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு பரிந்துரைத்தார்.

இவ்வழக்கில் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய ஆகாஷ் என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதனையடுத்து கோவை மத்திய சிறையில் உள்ள ஆகாஷிடம் குண்டர் சட்டத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News