உள்ளூர் செய்திகள்

மதுக்கரை அருகே தறிகெட்டு ஓடிய லாரி மோதி வாலிபர் பலி

Published On 2023-02-04 14:51 IST   |   Update On 2023-02-04 14:51:00 IST
  • செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் எல்.அன்டு. டி. பைபாஸ் ரோட்டில் சென்றார்.
  • இந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்ற மற்றொரு லாரி மீது மோதியது.

கோவை,

மதுக்கரை அருகே உள்ள பாலத்துறையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). இவர் இன்று காலை 8.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் எல்.அன்டு. டி. பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டு இருந்தது. லாரியை பாஸ்கரன் என்பவர் ஓட்டிச் சென்றார். திடீரென இந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்ற மற்றொரு லாரி மீது மோதியது.

பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்ற செந்தில்குமார் மீது மோதியது.

இதில் சம்பவஇடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். தொடர்ந்து லாரி நிற்காமல் அந்த பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டின் அருகே உள்ள கடையின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இருந்த செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News