சூலூர் அருகே ஊழியரை கத்தியால் குத்திய வாலிபர்
- தன்னை யாரோ கையில் வெட்டியதாக கூறி வரவழைத்து கொடூரம்
- கொலை வழக்கில் தொடர்பு பற்றி பேசியதால் குத்தியதாக வாக்குமூலம்
கோவை,
கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள அருளானந்தம் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று கடையில் இருந்த முருகனுக்கு ஆசிரியர் காலனியை சேர்ந்த மாதவன் (21) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை யாரோ கையில் வெட்டி விட்டதாக கூறினார். முருகன் உடனடியாக மாதவன் அழைத்த இடத்துக்கு சென்றார்.
அங்கு தனியாக நின்று கொண்டு இருந்த அவர் நீ என்ன பெரிய ஆளா என கூறியபடி அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து முருகனின் வயிற்றில் குத்தினார். பின்னர் அங்கு இருந்த தப்பிச் சென்றார்.
கத்திக்குத்தில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் முருகனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து சூலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த மாதவனை கைது செய்தனர்.
அவரிடம் கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். விசாரணையில் மாதவன், ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். அந்த கொலை சம்பந்தமாக முருகன் பேசியதால் அவரை கத்தியால் குத்தியதாக கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் மாதவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.