உள்ளூர் செய்திகள்

கோவை அருகே காதலி வீட்டுக்கு சென்ற வாலிபரை கொன்ற உறவினர்

Published On 2023-06-06 09:17 GMT   |   Update On 2023-06-06 09:17 GMT
  • பெண்ணின் தந்தை தகராறை விலக்கிவிடவே சென்றது தெரியவந்ததால் விசாரணைக்கு போலீசார் விடுவித்தனர்.
  • போலீசார் விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை,

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). கூலித் தொழிலாளி. இவரும் செட்டிப்பாளையத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு பிரசாந்த் தனது காதலிக்கு பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி வாழ்த்து சொல்வதற்காக தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.

குடிபோதையில் இருந்த அவர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். அப்போது பிரசாந்த் தனது காதலியின் பெயரை கூறி வெளியே வருமாறு அழைத்தார்.

இந்த சத்தம் கேட்டு பெண்ணின் தந்தை மகாதேவன், தாய் மாமா விக்னேஷ் ஆகியோர் வெளியே வந்தனர். அப்போது பிரசாந்த் அவர்களிடம் பிறந்த நாள் கொண்டாட தனது காதலியை வெளியே அனுப்புமாறு கூறி தகராறு செய்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை வெட்டினார். இதில் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விக்னேஷ், பிரசாந்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் இளம்பெண்ணின் தந்தை மகாதேவன், பிரசாந்தை கட்டையால் தாக்கியதாக அவருடன் சென்ற நண்பர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மகாதேவனையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தகராறை விலக்கிவிடவே சென்றது தெரியவந்தது. இதையடுத்து மகாதேவனை விசாரணைக்கு பின்னர் போலீசார் விடுவித்தனர்.

Tags:    

Similar News