கோவில்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் - சட்டசபையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேச்சு
- தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மையப்பகுதியாக கோவில்பட்டி இருந்து வருகிறது.
- எனவே கோவில்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பேசினார்.
கோவில்பட்டி:
சட்டசபையில் நடைபெற்ற வணிகவரி மற்றும் செய்திதுறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தொடக்கி வைத்து கடம்பூர்ராஜு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மையப் பகுதியாக கோவில் பட்டி இருந்து வருகிறது. எனவே கோவில்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இங்கு விவசாயத்திற்கு மாற்றாக, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக தீப்பெட்டி தொழில் உள்ளது.
தறபோது சீனாவில் இருந்து வருகிற லைட்டர் தீப்பெட்டி தொழிலுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. எனவே மாநில அரசு லைட்டருக்கு தடை விதித்து பல்லாயிரக்க ணக்கான தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை கணக்கில் பார்த்தால் சராசரியாக 52 சதவீதம் தான் மழை பெய்துள்ளது.
நிலத்தடிநீர் மிகவும் குறைந்த நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தை அரசு உடனடியாக இந்த ஆண்டு வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.