உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியை சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

Published On 2023-09-22 15:18 IST   |   Update On 2023-09-22 15:18:00 IST
  • திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் தற்போது கடலூர் மத்திய சிறையில் உள்ளார்.
  • இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு, கடலூர் கலெக்டரிடம் அனுமதி கோரினார்.

கடலூர்:

முத்தாண்டிகுப்பம் அடுத்த பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (வயது 24). இவர் கொள்ளை, திருட்டு, கொலை மிரட்டல் போன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் தற்போது கடலூர் மத்திய சிறையில் உள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பண்ருட்டி போலீசார் கடலூர் மாவட்ட போலீசாருக்கு பரிந்துரைத்தனர்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு, கடலூர் கலெக்டரிடம் அனுமதி கோரினார். இதற்கு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் அனுமதியளித்ததை தொடர்ந்து, அசோக்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரை கைது செய்த பண்ருட்டி போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அசோக்குமார் மீது திருட்டு, தீண்டாமை வன்கொடுமை வழக்கு,பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய வழக்கு என 6 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News