மஞ்சூர் அருகே அரசு பள்ளியின் கதவை உடைத்து சூறையாடிய கரடி.
- மஞ்சூர் பஜார் பகுதியில் திலிப்குமார் என்பவரது கடையை பலமுறை கரடி உடைத்து பொருட்களை சூறையாடி சென்றது
- கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக கரடி ஒன்று நடமாடி வருகிறது.
பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடிகள், இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் கடை வீதிகளில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், இரவு மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வந்த கரடி, அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை ஒட்டி அமைந்திருந்த சமையல் அறையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது.
தொடர்ந்து மற்றொரு கதவையும் உடைத்தெறிந்த கரடி, அங்கு வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணையை குடித்துவிட்டு பொருட்களையும் கீழே தள்ளி சூறையாடி சென்றது.
பஜாரின் மையப்பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் கரடி புகுந்து பொருட்களை சூறையாடி சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்த வனத்துறையினர் பள்ளிக்கு சென்று பார்வை யிட்டு ஆசிரியர்களிடம் விசாரித்து சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பும் மஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்த திலிப்குமார் என்பவரது கடையை பலமுறை கரடி உடைத்து பொருட்களை சூறையாடி சென்றது குறிப்பிடத்தக்கது
இடையில் ஓரிரு நாட்கள் கரடியின் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பஜார் பகுதியில் நடமாடி வருவதுடன் அட்டகாசத்திலும் ஈடுபடு வது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.