உள்ளூர் செய்திகள்

கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 9 பஸ்களுக்கு அபராதம்

Published On 2023-04-26 09:11 GMT   |   Update On 2023-04-26 09:11 GMT
  • மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிப்போர் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.
  • அரசு மற்றும் தனியார் பஸ்களில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சிவகுருநாதன் திடீர் சோதனை நடத்தினார்.

கோவை,

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஊட்டிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் நகருக்குள் ஏற்படும் நெரிசலை குறைக்கும் நோக்கில் சாய்பாபா கோவில் அருகே கடந்த 2010-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றால் பயண தூரம் குறையும் என்பதால், புதிய ஸ்டேஜ் உருவாக்கி அதற்கேற்ப கட்டணத்தை குறைக்க வேண்டும் என முந்தைய கலெக்டர்கள் உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. தடை ஏதும் விதிக்கப்பட வில்லை. இருப்பினும் பஸ்களில் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படுவதை ேபாக்குவரத்து துறையினர் உறுதி செய்யாமல் இருந்து வந்தனர். இதனால் தினசரி மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிப்போர் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.

இந்தநிலையில் காந்திபுரம்- மேட்டுப்பாயைம் வழி தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சிவகுருநாதன் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

2018-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி கட்டணம் குறைக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறதா என சோதனை செய்ேதாம்.

அப்போது புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பயணிக்க கட்டணமாக ரூ.20-க்கு பதில் ரூ.22 வசூலித்த 2 அரசு பஸ்கள், காந்திபுரம் - மேட்டுப்பாளையம் இடையே ரூ.23-க்கு பதில் ரூ.25 கட்டணம் வசூலித்த 2 தனியார், 4 அரசு பஸ்கள், ரூ.23-க்கு பதில் ரூ.30 வசூலித்த ஒரு அரசு பஸ் என மொத்தம் 9 பஸ்களுக்கு அபராதம் விதிக்க தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ்களுக்கு அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களுக்கு தணிக்கை அறிக்கை அனுப்பப்படும். அவர்கள் அபராதம் விதிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News