உள்ளூர் செய்திகள்

கோவையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரால் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்

Published On 2023-09-26 09:20 GMT   |   Update On 2023-09-26 09:20 GMT
  • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கடந்த 22-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்
  • மகேந்திரனின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டன

கோவை,

கோவை பீளமேடு கச்சம்மா நாயுடு வீதியை சேர்ந்தவர் கே.மகேந்திரன்(வயது38).

இவர் கடந்த 19-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, பீளமேடு எல்லைதோட்டம் அருகே சென்ற போது நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் கடந்த 22-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்.

மகேந்திரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது மனைவி கோகிலா மற்றும் பெற்றோர் முன்வந்தனர்.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுதியுடன் மகேந்திரனின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டன.

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், இருதயம் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டன. கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் அனுப்பி வைத்தனர்.

இவரது உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். இதுகுறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறியதாவது:-

மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால், அது பலரது உயிரை காப்பாற்ற உதவும்.

உடல் உறுப்பு தானம் வழங்கிய மகேந்திரன் குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News