உள்ளூர் செய்திகள்

கோவையில் மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2023-07-05 08:54 GMT   |   Update On 2023-07-05 08:54 GMT
  • மர்மநபர் ஒருவர் ராதாமணியிடம் முகவரி கேட்பது போல நடித்து சங்கிலியை பறித்தார்.
  • ராதாமணி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

கோவை,

கோவை இருகூரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி ராதாமணி (வயது 65). இவர்கள் வீட்டிலேயே திண்பண்டங்கள் தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று அவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த மர்மநபர் ஒருவர் அவரிடம் முகவரி கேட்டுள்ளார். ராதாமணியும் அவரிடம் முகவரி சொல்லி கொண்டிருந்தார். அப்போது அருகே வந்த அந்த நபர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வருவதற்குள் மர்ம நபர் ஏற்கனவே தயாராயிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பிரேமா (56). சம்பவத்தன்று அவர் அருகில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து நடந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பிரேமா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் செயினை பிடித்து இழுக்க பாதி செயினுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News