உள்ளூர் செய்திகள்
திருவள்ளூரில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் வெங்கடேசன், மலர்க்கொடி, மாலா, மாவட்ட இணை செயலாளர்கள் கருணாகரன், தேன்மொழி வனிதா, மாநில செயற்குழு உறுப்பினர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கொளுத்தும் வெயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தியதைப்போல் சத்துணவு ஊழியர்களின் பணி காலத்தை 60 வயதில் இருந்து 62 வயதாக உயர்த்த வேண்டும்.
வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் ஆயிரக்கணக்கான அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூபாய் 6750 குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் குணசுந்தரி நன்றி கூறினார்.