உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் பொது இடங்களில் மஞ்சபை தரும் எந்திரங்கள்

Published On 2022-05-22 07:14 GMT   |   Update On 2022-05-22 07:17 GMT
பொது மக்களுக்கு மஞ்சபை எளிதாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றுசூழல் துறையினர் பொது இடங்களில் மஞ்சபை தரும் எந்திரங்களை நிறுவ உள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்கும் எண்ணத்தில் தமிழக அரசு மஞ்சபை திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மக்கள் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மஞ்சபை திட்டத்துக்கு மக்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பொது மக்களுக்கு மஞ்சபை எளிதாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றுசூழல் துறையினர் பொது இடங்களில் மஞ்சபை தரும் எந்திரங்களை நிறுவ உள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த எந்திரங்கள் விரைவில் நிறுவப்படுகிறது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் மஞ்சபை எந்திரங்கள் பொது மக்களின் வசதிக்காக வைக்கப்பட உள்ளன.

மஞ்சபை எந்திரம் ஏ.டி.எம். எந்திரங்களை போல வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம். எந்திரங்களில் அட்டையை சொருகி பணத்தை எடுப்பது போல மஞ்சபை எந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் ஒன்றை போட்டால் ஒரு மஞ்சபை கிடைக்கும்.

இந்த எந்திரத்தின் உள்ளே ஒரே நேரத்தில் 400 மஞ்சபைகளை அடுக்கி வைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு எளிதாக மஞ்சபை கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மஞ்சபை எந்திரத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாகு அளித்து உள்ள பேட்டியில் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மஞ்சபை எந்திரத்தில் இருந்து பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை செலுத்தி மஞ்சபையை பெறுவது எளிதானது தான் என்று தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து மஞ்சபை எந்திரத்துக்கான வடிவம் மற்றும் செயல்பாட்டை வடிவமைத்துள்ளனர்.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறும்போது, பொது இடங்களில் மலிவு விலையில் துணி பைகள் கிடைப்பது சவாலாகவே உள்ளது என்றும் மஞ்சபை எந்திரங்கள் மூலம் பொது மக்களுக்கு துணிப்பை எளிதாக கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.

எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் குறைத்து துணி பைகளையே பயன்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

Tags:    

Similar News