உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சுதேசி-பாரதி மில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- எஸ்.பி. சிவக்குமார் வலியுறுத்தல்

Published On 2022-05-13 10:22 IST   |   Update On 2022-05-13 10:22:00 IST
மத்திய அரசிடம் உரிய நிதியை பெற்று சுதேசி-பாரதி மில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்.பி. சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுதேசி-பாரதி மில்களை, நிர்வாகம் சார்பில் வருகிற 30-ந்தேதியுடன் மூட அனுமதிக்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், பரிந்துரை நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், வந்துள்ள தகவல் மனதை கலங்க செய்கிறது.

ஏ.எப்.டி., சுதேசி மற்றும் பாரதி மில்களில் அந்த காலங்களில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான குடும்பங்களினால் புதுவையில் அமைதி நிலவியது. குற்றங்கள் குறைந்திருந்தன.

 தற்போது வெற்றிபெற்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி நடத்துகின்ற ஆட்சியாளர்களை வாழ்த்துகின்றோம். ஆனால் ஆட்சி கட்டிலில் அமர்ந்து ஒரு வருடம் கழிந்த பின்னால் அனைத்து மில்களும் மூடப்படுவதும், அதை இயங்க செய்வதற்கு உண்டான சக்தியும், பலமும், செல்வாக்கும் பெற்ற, முதல்-அமைச்சரும், கவர்னரும், புதுவையில் பெஸ்ட் ஆட்சியை தருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ள பிரதமரும் வேடிக்கை பார்ப்பதும், மில்களை இன்று வரை இயங்கச் செய்யாமல் அமைதியாய் இருப்பதும், மில்கள் மூடப்படுகின்ற நடவடிக்கைகளை அங்கீகரிப்பதும், எந்த வகையில் நியாயம்.

3 மில்களும் முழுமையாக இயங்குவதன் மூலம், புதுவை மாநிலத்தின் ஐந்தில், ஒரு பகுதி குடும்பங்கள் நிம்மதியாக வாழும் என்பது ஏன் யாருக்கும் புரியவில்லை.தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, ஒரு எதிர்க்கட்சித்தலைவராக, மில்களை உடனடியாகத் திறக்கக்கோரி சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதுநாள் வரை ஒரு பதிலும் இல்லை.

எனவே கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர்  மத்திய அரசை அணுகி உரிய நிதியை பெற்று 3 மில்களையும் இயங்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News