பண்ருட்டி அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல்- 2 பேருக்கு வலை வீச்சு
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து குள்ளஞ்சாவடிக்கு ஏ. ஆண்டிக்குப்பம் வழியாக அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கண்டக்டராக பாலன் இருந்தார்.
இந்த பஸ் ஆண்டிக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் கண்டக்டர் பாலன் கீழே இறங்கி வந்து மோட்டார் சைக்கிளை வேறு இடத்தில் நிறுத்தினார். இதனை பார்த்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கண்டக்டர் பாலனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயம் அடைந்த பாலன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்டக்டரை தாக்கியது ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த சிவமணி (வயது 35), பிரபு (25) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.