உள்ளூர் செய்திகள்
கொலை

திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்- தந்தையை அடித்து கொன்ற மகன்

Published On 2022-05-10 10:23 IST   |   Update On 2022-05-10 10:23:00 IST
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. இவரது மூத்த மகன் ஜான்சன் (வயது 39), மற்ற இரு மகன்களும் படித்துவிட்டு வேலை செய்து வருகின்றனர்.

ஆனால் ஜான்சன் படிக்காமலும், வேலைக்கு செல்லாமலும் இருந்தார். குடிபழக்கத்திற்கு அடிமையான இவர் தினமும் குடித்து விட்டு வந்து தாய், தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தகராறில் ஈடுபட்டார்.

நேற்றும் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தந்தை லூர்துசாமியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி ஜான்சன் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த ஜான்சன் தந்தை என்று கூட பாராமல் கருங்கல்லால் லூர்துசாமியை தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த ஜான்சன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

படுகாயம் அடைந்த லூர்துசாமியை உறவினர்கள், சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்துசாமி இறந்தார்.

இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்து ஜான்சனை தேடி வருகிறார்கள்.

Similar News