உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் சிமெண்டு தொழிற்சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய அரவை ஆலை அமைப்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசின் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது.
இங்கு சிமெண்ட் கார்ப்பரேசன் நிர்வாக இயக்குநர் காமராஜ், கலெக்டர் மேகநாதரெட்டி, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்மவையிட்டு ஆய்வு செய்தனர்.
இங்கு ரூ.40கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிமெண்டு அரவை ஆலை நிறுவுவதற்கான அமைவிடத்தை பார்வை யிட்டனர்.
இந்த ஆய்வில் ஆலையில் உள்ள கிளிங்கர் வளாகம், வலிமை சிமெண்ட் பேக்கிங், சிமெண்ட் மில் அரவை இயங்குதல் உள்ளிட்ட உற்பத்தி முறைகளை பார்வையிட்டுட்டனர். பின்னர் ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சர்கள் நட்டு வைத்தனர்.
ஆய்வின்போது அமைச்சர்கள் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலத்தில் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் தொழில் உற்பத்திகளை மேம்ப டுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை விரைவாக செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை 1966-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 14.6.1970 அன்று கருணாநிதியால் சிமெண்டு உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டது.
சிறப்பாக செயல்பட்ட இந்த ஆலை காலப்போக்கில் தாராளமயமாக்கல் கொள்கை அடிப்படையில் தனியாருக்கு சமமாக, ஈரப்பத தொழில்நுட்ப முறையிலிருந்து உலர்பத தொழில் நுட்பத்திற்கு மாற முடியாமலும், பயன்பாட்டில் உள்ள 2 சிமெண்டு அரவை எந்திரங்கள் மிக பழமையான காரணத்தால் அதிக அளவில் பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதாக இருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி, இந்த பகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும், தென்மாவட்டங்களின் அதிக அளவிலான சிமெண்ட் தேவையினை கருத்திற்கொண்டும் ரூ.40 கோடி மதிப்பில் மணிக்கு 80 மெட்ரிக் டன் திறனுடைய நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் அமைக்கப்பட உள்ளது.
அதனடிப்படையில் புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் அமைப்ப தற்கான இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் நிறுவுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 10 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு சிமெண்ட் உற்பத்திக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பணி நிறைவு பெறும் பட்சத்தில் ஆண்டுக்கு சிமெண்ட் உற்பத்தி திறன் 2.75 லட்சம் மெ.டன் என்ற அளவிலிருந்து 5.6 லட்சம் மெ.டன்னாக அதிகரிக்கும். இதன் மூலம் நேரடியாக 60 நபர்களுக்கு நிரந்தர பணிகளும், 500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலு வலர் மற்றும் வணிக பொது மேலாளர் நர்மதாதேவி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, துணை பொது மேலாளர் (ஆலைத் தலைவர்) மாரிக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.