உள்ளூர் செய்திகள்
நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்

திட்டக்குடி அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்

Published On 2022-05-02 12:11 GMT   |   Update On 2022-05-02 12:11 GMT
நீரைபாசனத்திற்குபயன்படுத்தினால் சாகுபடிக்கு தகுதியற்ற நிலமாக மாறும் அபாயம் உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேங்கியுள்ளதால் சரியாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி போத்திரமங்கலம் ஆகிய 2 ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது சில மாதங்களாக வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இதன்மூலம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் இந்த அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகள் தண்ணீர் அருந்தி வருகின்றன. அப்பகுதி விவசாயிகள் தண்ணீரில் குளித்தும் வருகின்றனர் .

தற்போது தண்ணீர் மிகுந்த துர்நாற்றத்துடன் வருவதாகவும் சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆவினங்குடி பஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தின் கீழ் அதிக அளவில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் அதிக அளவில் வாய்க்காலில் நீர் நிலையில் கொட்டி வருகின்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறை, கடலூர் மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகிகளுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பல முறை தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் அவ்வழியில் செல்லும் பொதுமக்கள், பாதசாரிகள், பஸ்சில் பயணம் செய்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோர், முகத்தில் துணியை வைத்துக் கொண்டு மூடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நீரைபாசனத்திற்குபயன்படுத்தினால் சாகுபடிக்கு தகுதியற்ற நிலமாக மாறும் அபாயம் உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேங்கியுள்ளதால் சரியாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம், இங்கு குவிந்துள்ள குப்பை, கழிவுகளை அகற்றவும், மீண்டும் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News