உள்ளூர் செய்திகள்
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

கடலூர் சாவடியில் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

Published On 2022-05-02 16:41 IST   |   Update On 2022-05-02 16:41:00 IST
கோடை வெயில் மற்றும் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீரால் அப்பகுதியில் குடிநீர் இல்லாமல் கடும் அவதி அடைந்து வந்தனர்.
கடலூர்:

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் கேப்பர் மலை, திருவந்திபுரம் பகுதிகளிலிருந்து ராட்சத குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போதுமான குடிநீர் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருவதை அறிந்த மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தினந்தோறும் கோடை வெயிலை சமாளிக்க வேண்டியும், குடிநீர் பற்றாக்குறை போக்குவதற்கும் வாகனங்கள் மூலம் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில் கடலூர் சாவடி பகுதியில் இன்று காலை குடிநீர் குழாய் திடீரென்று உடைந்து கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சாலையில் குட்டை போல் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோடை வெயில் மற்றும் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீரால் அப்பகுதியில் குடிநீர் இல்லாமல் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இது சம்பந்தமாக கடலூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் அனைத்து தரப்பு மக்களும் வேதனை அடைந்ததோடு, இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News