உள்ளூர் செய்திகள்
கைது

நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

Published On 2022-05-02 09:53 IST   |   Update On 2022-05-02 09:53:00 IST
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோடியக்கரைக்கு அருகே வெள்ளபள்ளம் நாலுவேதபதிக்கு இடையே இலங்கையை சேர்ந்த ஒரு படகு நிற்பதை பார்த்த கடலோர காவல்படையினர் உடனடியாக படகின் அருகே சென்று பார்த்தனர். அதில் இலங்கை நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தமிழக எல்லைக்குள் மீன் பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து எல்லைதாண்டி மீன் பிடித்ததாக அந்த 6 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் எதற்காக எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் 6 பேரையும் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். படகையும் பறிமுதல் செய்தனர்.

அங்கு அவர்களிடம் பெயர், இலங்கையில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், எதற்காக எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் போன்றவை குறித்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணை முடிந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை முடிந்த பின்னர் இலங்கை மீனவர்கள் 6 பேரும் நாகை கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அதன்பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 பேரும் சிறையில் அடைக்கப்படுவர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News