சிதம்பரம் அருகே சமையல் தொழிலாளி வெட்டிக்கொலை?
சிதம்பரம்:
சிதம்பரத்தை அருகே நஞ்சமகத்து வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அய்யப்பன் (வயது 20). சமையல் வேலை செய்துவந்தார்.
இவர் கடந்த 20ந் தேதி கண்ணன் குடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.நேற்று மாலை முதல் அய்யப்பன் திடீரென மாயமானார். பல இடங்களில் அவரைபற்றி விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதே ஊரில் உள்ள கோணங்குளத்தில் தலையில் வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிதம்பரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த பகுதிகளில் ஆய்வு நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மாயமான அய்யப்பன்தான் குளத்தில் வெட்டுகாயங்களுடன் பிணமாக கிடந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் குளத்தில் தவறிவிழுந்து இறந்தாரா? அப்போது அவரது தலையில் காயம் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் அவரை வெட்டிக்கொன்று பின்னர் குளத்தில் உடலை வீசி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் வெட்டுகாயங்களுடன் குளத்தில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.