உள்ளூர் செய்திகள்
கைது

வெடிவிபத்தில் தொழிலாளி பலி: பட்டாசு ஆலை மேலாளர் கைது

Published On 2022-04-21 12:25 IST   |   Update On 2022-04-21 12:25:00 IST
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெடிவிபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பர்மா காலனியில் தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று மதியம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனை மலையைச் சேர்ந்த அரவிந்தன் (வயது 22) என்பவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் விசாரணை நடத்தி பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கப்பாண்டி, அவரது சகோதரர்கள் ஈஸ்வரன், ராஜேஸ்வரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பட்டாசு விபத்து ஏற்பட அஜாக்கிரதையாக இருந்ததாக ஆலை மேலாளர் ராஜேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விபத்தில் பலியான அரவிந்தன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவிலைச் சேர்ந்த அன்னக்கிளி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அரவிந்தன் வெடிவிபத்தில் இறந்த சம்பவம் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Similar News