உள்ளூர் செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

தென்மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2022-04-11 07:59 GMT   |   Update On 2022-04-11 10:33 GMT
14, 15-ந் தேதிகளில் உள் தமிழகத்தில் கன்னியாகுமரி , தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (12-ந் தேதி) தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். 13-ந் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

14, 15-ந் தேதிகளில் உள் தமிழகத்தில் கன்னியாகுமரி , தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னர் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவை குண்டம், ராமேஸ்வம், மயிலாடி தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News