உள்ளூர் செய்திகள்
திறமையறிந்து இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி பெறலாம்
நம் திறமையறிந்து இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி பெறலாம் என்று இஸ்ரோ தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
கரூர் :
கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி மைய விஞ்ஞானியும், தலைமை பொறி யாளருமான பெ.சசிக்குமார் எழுதிய, விண்ணூர்தி நூல் வெளியீட்டு விழா மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பெ.சசிக்குமார் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டு கருத்துரை வழங்கி பேசும் போது, ஒரு பொருளை வாங்கும்போது அதன் நம்பகத்தன்மை, உழைக்கும் காலம் ஆகியவற்றை பார்ப்போம். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் 1,000 நாட்கள் உழைத்தால் அது அடுத்து வரும் 10,000 முதல் 15,000 வரையிலான நாட்களை சிறப்பாக வைத்திருக்கும். நம்மை சுற்றி உள்ளவற்றை பாடத்தோடு சம்பந்தப்படுத்தி படிக்கவேண்டும்.
எல்லோருமே ஒரு கற்பனை எல்லையை உருவாக்கி கொண்டு தமது முன்னேற்றத்திற்கு அதுவே தடை என நினைக்கின்றனர். தங்களிடம் எது இல்லையோ அதையே தடையாக கற்பனையாக நினைத்துக் கொண்டு தங்கள் முன்னேறாமல் உள்ளனர்.
ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு 2,000 முதல் 3,000 சக்தி போதுமானது. 1 கிலோ முந்திரி பருப்பில் 7,000 கலோரி உள்ளது. அதன் விலை அதிகம். அதே கலோரி வேர்க்கடலையிலும் உள்ளது.
கற்பனை தடைகளை நினைத்துக் கொண்டிராமல் வெற்றியை நோக்கி செல்லவேண்டும். நம்மிடம் உள்ள திறமையைக் கண்டறிந்து இலக்கை நோக்கி போகவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் த.பிரபுசங்கர் நூலை வெளியிட்டு பேசியதாவது, திட்டமிட்டு கடினமாக உழைத்தால் இலக்கை அடையலாம் என்றார்.