உள்ளூர் செய்திகள்
நெருப்பை அணைத்த தீயணைப்பு படையினர்

பண்ருட்டி அருகே வீட்டில் தீ விபத்து: நகை-பணம் எரிந்து நாசம்

Published On 2022-02-26 15:53 IST   |   Update On 2022-02-26 15:53:00 IST
பண்ருட்டி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே பூங்குணம் அண்ணா நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது45). விதவை கூலித்தொழிலாளியான இவரது கூரை வீட்டிற்குள் அடிக்கடி பாம்புகள் வந்துபோவதால் இரவு மட்டும் அருகில் உள்ள இவரது மகள், மருமகன் வீட்டிற்கு சென்று படுத்துக் கொள்வது வழக்கம்.

அதேபோல நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள அவரது மருமகன் வீட்டில் படுக்கச் சென்றார். அப்போது திடீரென்று இவரது கூரை வீடு தீ பிடித்தது.

தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் போலீசார் கேசவ பெருமாள்சாமி, வேல்முருகன் ஆகியோர் பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் அக்கம்பக்கம் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

வீட்டில் இருந்த பீரோ மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது பீரோவில் இருந்த ரூ.25,000, பணம், 4 பவுன் நகை எரிந்து சேதமானது கூறப்படுகிறது. இதுபற்றி பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News