உள்ளூர் செய்திகள்
ஊட்டி மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை பாரம்பரிய இசை வாத்தியம் முழங்க வரவேற்ற பழங்குடியினர்
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் மூலம் பெறப்பட்டது.
ஊட்டி:
தமிழகத்தில் நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் மூலம் பெறப்பட்டது. தொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்றது.
நேற்று ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கியது. கட்டுமான பணி முடிவடையாததால் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வகுப்புகள் நடந்தது.
ஊட்டி மருத்துவ கல்லூரியை தேர்வு செய்த மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வருகை தந்தனர். அவர்களின் அசல் சான்றுகள் சரிபார்க்கப் பட்டது. ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு மாணவர் களுக்கான தொடக்க நிகழ்ச்சி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந் தது.
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் பழனிசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி ஆகியோர் தலைமையில், மருத்துவக் குழுவினர், பழங்குடியினர், நீலகிரியின் பாரம்பரிய இசையுடன் மாணவர்களை வரவேற்றனர். பின்னர், மாணவ, மாணவிகள் தர்மத்தின்படி பணி செய்வதாக உறுதிமொழி ஏற்றனர்.
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறுகையில், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 127 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. 23 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்படவுள்ளது.
இதில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் 10 மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் ஒரு மாணவர், மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் என்ற அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் சேர்க்கையில் நீலகிரியைச் சேர்ந்த 3 மாணவிகள் உள்பட 86 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர் என்றார்.