உள்ளூர் செய்திகள்
துறையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ரவுடி கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:
துறையூர் அருகே உள்ள கீரம்பூர் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவரது மனைவி ராகசுதா (30). கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று ராகசுதா வேலை முடித்து வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் இவரிடம் ஆபாச வார்த்தைகள் பேசி தகராறு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ராகசுதா துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தெரிந்துகொண்ட ஆனந்த் மற்றும் அவரது நண்பர்களான சிங்கப்பெருமாள், வெங்கடேசன், அங்கமுத்து மற்றும் சிலர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறி, சுரேஷை தாக்கியதோடு, அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சுரேஷிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ் துறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் இந்த பகுதியில் கத்திகளுடன் மிரட்டியும் தாக்கியும் வரும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியில் அடையாளம் தெரியாத வெளிநபர்கள் நடமாட்டத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் சுமார் 60&க்கும் மேட்பட்டோர் திரண்டு சென்று துறையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ரவுடி கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.