உள்ளூர் செய்திகள்
நந்தம்பாக்கம் அருகே விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை
நந்தம்பாக்கம் அருகே குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுடர்விழி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த கண்ணன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கினார். இதை பார்த்த அவரது மனைவி சுடர்விழி தூக்குப்போட்டு கொண்டார். மகன் மற்றும் மகளின் அலறல் சத்தம் கேட்ட வீட்டில் இருந்த உறவினர்கள் வந்து பார்த்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுடர்விழி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.