உள்ளூர் செய்திகள்
திருப்பூர் ஓட்டல்களில் அதிரடி சோதனை- 41 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
சுகாதாரமாக பராமரிக்கப்படாத 4 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் காங்கயம் ரோடு, ரெயில் நிலைய சுற்றுப்பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மொத்தம் 17 அசைவ ஓட்டல்களில் உணவுதரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சுகாதாரமாக பராமரிக்கப்படாத 4 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
தரம் குறைவான கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்த 2 கடைகளில் இருந்து 41 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் தரமில்லாத சுகாதாரமற்ற நிலையில் இருந்த 3.50 கிலோ இஞ்சி, பூண்டு பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகளில் ஆய்வு நடத்தியதில் அனுமதியற்ற ‘நிக்கோடின்’ கலந்த புகையிலை பொருட்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 9 கடைகளில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர் விற்றவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில்,
அனைத்து கடைகளும் பதிவு சான்று, உரிமச்சான்று பெற்றும் புதுப்பித்தும் வைத்துக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் பார்வைக்கு தெரியும் இடத்தில் வைக்க வேண்டும். உணவு கலப்படம், உணவு தரம் குறைவு போன்ற புகார்களை 94440 42322 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண் களில் பதிவு செய்யலாம் என்றார்.