உள்ளூர் செய்திகள்
அமராவதி அணைப்பகுதியில் குவிந்து கிடக்கும் பாலித்தீன் குப்பைகளால் வனவிலங்குகள் பாதிக்கும் அபாயம்
சுற்றுலாப்பயணிகளின் அத்துமீறலை துறை ரீதியான அதிகாரிகள் கண்டறிந்து தடுக்க வேண்டும்.
உடுமலை:
வார விடுமுறை நாட்களில் உடுமலை அடுத்த திருமூர்த்தி அணைக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் அருகேயுள்ள அணையின் கரையோரத்திலும் உலா வருகின்றனர். அவர்களில் சிலர் மீதமான உணவுப் பொருட்களையும், பிளாஸ்டிக் டம்ளர் போன்ற பொருட்களையும் வீசி விடுகின்றனர்.
அதேபோல் விஷமிகள் சிலர் மதுகுடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே விட்டுச்செல்கின்றனர். இதனால் சுற்றுப்புறம் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. அவற்றை அகற்ற போதிய தூய்மைப்பணியாளர்களும் கிடையாது.
சுற்றுலாப்பயணிகளின் இத்தகைய அத்துமீறலை துறை ரீதியான அதிகாரிகள் கண்டறிந்து தடுக்க வேண்டும். இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் குப்பை, மதுபாட்டில்கள் வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் சேகரமாவதால் வனவிலங்குகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகிறது.
இயற்கை சூழல் நிறைந்த பகுதியை அசுத்தப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மது அருந்துவோரைக் கண்டறிந்து தடுக்க வேண்டும் என்றனர்.