செய்திகள்
ஓ. பன்னீர்செல்வம்

கலைஞர் உணவகம் என்ற பெயரில் திறப்பது அம்மா உணவகம் பெயரை இருட்டடிப்பு செய்யும் செயல்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-11-26 09:31 GMT   |   Update On 2021-11-26 09:32 GMT
நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக கூறி உள்ளார். இது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும், பணி நிமித்தமாக பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து செல்லும் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன.

இது மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு தலைமை மருத்துவமைகைளிலும் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஏழை எளிய வெளிப்புற நோயாளிகள், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் பயன் அடைந்து வருகின்றனர். இன்று தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவங்கள் செயல்படுகின்றன.



அம்மா உணவகம் என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு “கலைஞர் உணவகம்” என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில், அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்து இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிதாக திட்டங்களை தீட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே, புதிதாக தீட்டப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அ.தி.மு.க.வுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

அதே சமயத்தில் நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றே நான் கருதுகிறேன்.

ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது அம்மாவின் சிந்தனையில் உதித்த ஓர் அற்புதமான திட்டம். எனவே, இந்த திட்டம் “அம்மா உணவகம்” என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் பொதுமக்களின் விருப்பம் ஆகும்.

எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் “அம்மா உணவகம்” என்ற பெயரிலே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News