செய்திகள்
நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 104 வாகனங்கள் பறிமுதல்
நாகை மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக 100 மோட்டார் சைக்கிள்களும், 4 கார்களும் என 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 104 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு்ள்ளது. இதில் பால், மருந்தகம், பெட்ரோல் விற்பனை நிலையம் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் நாகை புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி கிடைக்கிறது. மேலும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக 100 மோட்டார் சைக்கிள்களும், 4 கார்களும் என 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.