செய்திகள்
ராமநத்தத்தில் வீட்டு கதவை உடைத்து பணம் திருட்டு
ராமநத்தத்தில் வீட்டு கதவை உடைத்து மர்ம மனிதர்கள் பணத்தை திருடி சென்றுவிட்டனர். மேலும் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
ராமநத்தம்:
திட்டக்குடி அடுத்த ராமநத்தம் சர்ச் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 34). 2 குழந்தைகள் உள்ளது. நாராயணன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் கணவரின் சொந்த ஊரான வடபாதிக்கு சென்றுவிட்டார். இதை பயன்படுத்தி மர்ம மனிதர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோ மற்றும் அலமாரிகளில் வைத்திருந்த ரூ.24 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.
இதேபோல், அதேபகுதியில் உள்ள கம்பன் தெருவை சேர்ந்த அம்பிகாபதி என்பவர் மாலத்தீவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சகுந்தலா (34) , 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீடான சித்தூருக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள் பீரோவை உடைத்துள்ளனர். அதில் பணம், நகை எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சகுந்தலா வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்த 3 பவுன் நகை மர்ம மனிதர்கள் கையில் சிக்கவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.