செய்திகள்
கார்த்திக் சிதம்பரம்

தமிழக முதல்வர் விபத்தால் தேர்வானவர் -கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டி

Published On 2021-01-07 14:27 IST   |   Update On 2021-01-07 14:27:00 IST
தற்போது உள்ள தமிழக அரசு விபத்தால் வந்த முதலமைச்சரை கொண்டுள்ளது என்று கார்த்திக் சிதம்பரம் எம்பி கூறியுள்ளார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதன் பகவான் மற்றும் அகோரமூர்த்தி சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோவிலில் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் சுவாமி தரிசனம் செய்தார். புதன் பகவான் சன்னதியில் 17 தீபங்கள் ஏற்றி சங்கல்பம் செய்து வழிபாடு நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியாக உள்ளதால் எந்த சட்டத்தை வேண்டுமானாலும் எந்நேரத்திலும் நிறை வேற்றலாம் என்ற ஆணவத்தில் மத்திய பா.ஜனதா அரசு உள்ளது. யாருடனும் கலந்து ஆலோசிப்பது கிடையாது.

தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.2500 கொடுக்கிறது. நாங்கள் ரூபாய் பத்தாயிரம் கொடுக்க வலியுறுத்தினோம். தற்போது கொடுக்கும் பணத்தை கொரோனா முழுஊரடங்கின் போதே கொடுத்திருக்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி அபாரமாக வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல இந்த வெற்றியும் அமையும்.

தற்போது உள்ள தமிழக அரசு விபத்தால் வந்த முதலமைச்சரை கொண்டுள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜகுமார், பாலகுரு, சரத் சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Similar News