செய்திகள்
கோப்புப்படம்

சேர்ந்து வாழ மறுப்பு- மனைவியின் கையை வெட்டி துண்டித்த கணவர்

Published On 2020-12-15 10:59 GMT   |   Update On 2020-12-15 10:59 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கையை வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஆணைவாரி நல்லதண்ணிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்காந்தி (வயது 35). அவரது மனைவி சத்தியவதி (30). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகன் சஞ்சய், மகள் சஞ்சனா ஆகியோர் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சத்யவதி கோபித்துக் கொண்டு தனது தாய் ஊரான விருத்தாசலத்துக்கு வந்துவிட்டார். அங்கு கூலிவேலை பார்த்து குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

நேற்று இரவு சஞ்சய்காந்தி விருத்தாசலத்துக்கு வந்தார். தனது மனைவியிடம் சேர்ந்துவாழ வருமாறு அழைத்தார். அதற்கு சத்தியவதி மறுத்துவிட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சஞ்சய்காந்தி மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி சத்தியவதியின் தலை, கை மற்றும் பல்வேறு பகுதியில் வெட்டினார்.

இதில் சத்தியவதியின் கை துண்டானது. அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சுருண்டுவிழுந்தார். இதனை பார்த்ததும் சஞ்சய்காந்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய சத்தியவதியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தூக்கிகொண்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரது நிலமை மோசமானதால் உடனடியாக அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சத்தியவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து சஞ்சய்காந்தியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News